தமிழகத்தில் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஆக.6-ம்தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6-ம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 7 மற்றும் 8-ம் தேதிகளில் மாநிலத்தில் பல பகுதிகளில்பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.



நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் தழுதலையில் 6 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செமீ,நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா4 செமீ, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், மேல் கூடலூர், கூடலூர் சந்தை, சேலம் மாவட்டம் சந்தியூர்,மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி,கோவை மாவட்டம் சின்கோனா ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 4-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ, வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.