மாட்ரிட்,
ஸ்பெயின் கால்பந்து அணியின் இளம் வீரர் லமைன் யமல். இவரது தந்தை மவுனிர் நஸ்ரவ்ஹி. இந்நிலையில், ஸ்பெயினின் கடலொனியா மாகாணம் மடாரோ பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை 7 மணியளவில் மவுனிர் நஸ்ரவ்ஹி தனது செல்லப்பிராணி நாயை அழைத்துக்கொண்டு நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, நடைபாதையில் சென்ற சிலர் மவுனிர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த கும்பல் மவுனிரை சரமாரியாக தாக்கினர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் மவுனிரை அந்த கும்பல் சரமாரியாக குத்தியது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த மவுனிரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரின் உடல்நிலை தற்போது சீரடைந்துள்ளது.
அதேவேளை தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்பெயின் கால்பந்து வீரரின் தந்தை மீது கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.