தவெக கட்சிக் கொடி நாளை அறிமுகம்: நடிகர் விஜய் அறிவிப்பு

சென்னை: “நாடெங்கும் நாளை முதல் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு நடிகர் விஜய் ஏற்றி வைக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அரசியலில் விஜய் எப்போது களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. இதற்கேற்ப விஜய் ரசிகர் சங்கமான தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பட்டினி தினத்தில் அன்னதானம், புயல் பேரிடர் பாதிப்பின்போது நிவாரணப் பொருட்கள் வழங்குதல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாளில் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்துதல் உள்ளிட்டவை தொடர்ச்சியாக நடந்தேறி வந்தன. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய்யும் பங்கேற்று வந்தார்.

இந்தச் சூழலில் தான் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அவர் நடித்த ‘தி கோட்’ என்ற திரைப்படத்தின் பணிகள் முடிந்த நிலையில், கட்சிப் பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, கட்சி கொடி அறிமுகம் செய்வது ஆகியவை குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் விஜய் அவ்வப்போது ஆலோசனை நடத்தினார். இதில், மாநாட்டுக்கு முன்பாகவே கட்சியின் கொடியை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 19-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிற பின்னணியில் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நாளை (ஆக.22) காலை 9.15 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைப்பதோடு, கொடி பாடலையும் வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில், பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கே தலைமையகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நீலங்கரை, கானாத்தூர் காவல் நிலையங்களில் நிர்வாகிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சொந்த இடத்தில் நிகழ்ச்சி நடைபெறுவதால், விஜய் செல்லும் வழித்தடத்தில் மட்டும் பாதுகாப்பு வழங்க போலீஸார் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் கட்சியின் கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்று தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் நடுவில் விஜய் முகம் இருக்கும் வகையிலான கொடி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நாளை (வியாழக்கிழமை) அறிமுகப்படுத்தி, கொடி பாடலை வெளியிடுவதாக அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் விழாவில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.