முதல் டெஸ்ட்; சரிவில் இருந்து மீண்ட பாகிஸ்தான்… முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 158/4

ராவல்பிண்டி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்க சிறிது காலதாமதமானது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அப்துல்லா ஷபீக் 2 ரன்னிலும், அடுத்து வந்த ஷான் மசூத் 6 ரன்னிலும், பாபர் அசாம் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் பாகிஸ்தான் 16 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து சவுத் ஷகீல், சைம் அயூப்புடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இதில் 56 ரன் எடுத்த நிலையில் சைம் அயூப், ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

தொடர்ந்து விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் களம் இறங்கினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 41 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தது. சவுத் ஷகீல் 57 ரன்னுடனும், ரிஸ்வான் 24 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

வங்காளதேசம் தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். இதையடுத்து 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.