100 அடி கல்குவாரி குழியில் கவிழ்ந்த டேங்கர் லாரி; தலை நசுங்கி பலியான டிரைவர்! – கரூர் சோகம்

கரூர் மாவட்டம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறன. இப்பகுதியில் ஒரு சில கல்குவாரிகள் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலான அளவு பள்ளம் தோண்டி பாறைகளை வெட்டி எடுத்து, கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட் மணல்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில், தாழையூத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ செல்வ விநாயகா ப்ளூ மெட்டல் கல்குவாரியில் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வந்த நிலையில், 100 அடி ஆழக்குழியில் 3 அடி அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதை எடுப்பதற்காக நாகப்பட்டினம் ஆயங்குடி பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (வயது: 41) என்ற ஓட்டுநரை பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். தண்ணீரை எடுப்பதற்காக 22,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரியில் தண்ணீர் நிரப்பி, அந்த டேங்கர் லாரியை இயக்கி மேலே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 75 அடி உயரத்திலிருந்து லாரி பாறைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் இறந்த டிரைவர்

அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு, பாறை குழி இடுக்கில் தலை மற்றும் உடல் பகுதிகள் நசுங்கி மயக்க நிலையில் சிக்கி இருந்த ஓட்டுநரை கீழே சென்று மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர், அவர் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் 100 அடி ஆழமுள்ள கல்குவாரி குழியில் உரிய பாதுகாப்பின்றி லாரி ஓட்டுநரை பணியில் ஈடுபடுத்தியதாக செல்வ விநாயகா ப்ளூ மெட்டல் உரிமையாளர்களில் ஒருவரான அ.ம.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் தங்கவேல் மற்றும் பங்குதாரர்களான சுப்பிரமணி, சக்திவேல், கந்தசாமி ஆகிய 4 பேர் மீது க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 100 அடி கல்குவாரி குழியில் டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.