Mollywood விவகாரம்: `குறைந்தபட்சம் கேரளா இதற்காக குரல் எழுப்பியிருக்கிறது’ – சசி தரூர் சொல்வதென்ன?!

கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் #MeeToo அலையை எழுப்பியுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் ஹேமா கமிட்டி அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுள்ளதால் பெரும் பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

இந்த நேரத்தில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், “இந்தியச் சமூகத்தின் மனப்பான்மையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

மலையாள திரையுலகில் எழுந்துள்ள #MeeToo பிரச்னையால் மூத்த உறுப்பினர்கள் அம்பலப்படுவதையும், காவல்துறையில் வழக்குள் பதியப்படுவதையும் வரவேற்ற சசி தரூர், பாலியல் சமத்துவ பிரச்னை தீர வேண்டுமென்றால் சமூகத்தில் பெரிய அளவிலான மாற்றம் தேவை எனப் பேசியுள்ளார்.

“நம் சமூகத்தின் திரைமறைவிலிருந்த பல விஷயங்கள் வெளியில் வருகின்றன… பெண்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக்கொள்வோம். இது பல ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. நாம் இப்போது பேசத் தொடங்கியுள்ளோம். 2012-ல் நிர்பயா வழக்கு முதல் 2024ல் கொல்கத்தா மருத்துவர் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கு வரை… ஒரு டஜன் ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், எதுவும் மாறவில்லை.” என்றார் சசி தரூர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

மேலும் பேசிய காங்கிரஸ் எம்.பி, “நான் ஒவ்வொரு நாள் செய்தித்தாளைப் புரட்டும்போதும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது ஒரு குழந்தையாக இருக்கலாம், கல்லூரி பெண் அல்லது நடுத்தர வயது பெண்மணியாக இருக்கலாம். இந்தப் பிரச்னைகளை நம்மால் தீர்க்க முடியாவிட்டால் இந்திய ஆண்களிடம் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.” என்றார்.

அத்துடன், “சிறுவயதில் பள்ளி மாணவர்களுக்குப் பாலின உணர்திறன் (Gender Sensitivity) கல்வியை வழங்கவேண்டும். அப்படி எதாவது நடவடிக்கை எடுக்க முடியும் என நம்புகிறேன். நாம் தொடர்ந்து சோகமான நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது நாம் அதிர்ச்சியடைகிறோம், கோபம்கொள்கிறோம் பின்னர் அடுத்த நிகழ்வுக்குக் கடந்து செல்கிறோம். இது வேலைக்கு ஆகாது. நமது அமைப்பில் முறையான மாற்றம் தேவை”. என்றார்.

மீண்டும் கேரளாவின் நிலை குறித்துப் பேசத் தொடங்கிய சசி தரூர், “இந்தியாவில் முதல் மாநிலமாக எங்கள் மாநிலம் இந்த பிரச்னையை கையாள்வதில் பெருமைகொள்கிறேன். எல்லா திரைத்துறையிலும் என்ன நடக்கிறது என வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறைந்தபட்சம் கேரளாவாவது இதற்காக குரல் எழுப்பியிருக்கிறது.” என்றார்.

நீதிபதி ஹேமா ஆய்வறிக்கையை கேரள அரசியிடம் சமர்பித்தார்

கேரளாவின் சிபிஐஎம் கட்சியை விமர்சித்த அவர், “இந்த அறிக்கையை 5 ஆண்டுகள் கிடப்பில் போட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிக்கை வந்த உடனேயே வெளியிட்டிருக்க வேண்டும்.” என்றார்.

மோகன்லால் உள்ளிட்ட AMMA அமைப்பின் நிர்வாகிகள் பதவி விலகியது குறித்துப் பேசிய அவர், “தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியது சரிதான். ஆனால், இந்த குற்றங்கள் எல்லாம் நடக்க அனுமதித்த அமைப்புக்கு அவர்கள் தலைமை தாங்கியிருக்கின்றனர் என்பதே உண்மை!” எனக் கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.