எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் உள்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி விசாரணை | கரூரில் நிலமோசடி வழக்கு

கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உள்ளிட்ட இருவரை சிபிசிஐடி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனாவுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டது. இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரவீண் மற்றும் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் ஆகியோர் ஜூலை 16-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரவீண், இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 நாட்களுக்கு முன்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக முகாந்திரம் இருப்பின் அவர்களை கைது செய்யலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கரூரில் தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சின்னாண்டாங்கோவிலில் உள்ள அவரது வீட்டருகே சிபிசிஐடி போலீஸார் இன்று (செப்.2) கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த செல்வராஜும் கைது செய்யப்பட்டார். கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பின் இருவரையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்திய பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.