ஹரியானா பாஜக-வில் கிளம்பிய உட்கட்சிப்பூசல்; தேர்தலில் சீட் கொடுக்காததால் வெளியேறிய அமைச்சர், MLA!

ஹரியானாவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்ட மறுநாளே, தங்களுக்கு சீட் மறுக்கப்பட்டதாக அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறிய சம்பவங்கள் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. 2014 முதல் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஹரியானாவில் அக்டோபர் 5-ம் தேதி, மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது.

ஹரியானா பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி

இதனை முன்னிட்டு, பா.ஜ.க முதற்கட்டமாக 67 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ராணியா தொகுதிக்கு தனது பெயர் அறிவிக்கப்படாததைக் கண்டு அதிருப்தியடைந்த, முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மகனும், மாநில எரிசக்தி மற்றும் சிறைத்துறை அமைச்சருமான ரஞ்சித் சிங் சவுதாலா, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.

இது குறித்து பேசியிருக்கும் ரஞ்சித் சிங் சவுதாலா, “பா.ஜ.க-வுடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. ஆனால், அவர்கள் யாருடைய பேச்சைக் கேட்டு இத்தகைய முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இத்தகைய ஆலோசனையை வழங்கியவர்கள் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று நான் சொல்வேன். சௌத்ரி தேவி லாலின் மகன் நான். எனக்கும் கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. எனவே, நான் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்திருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சித் சிங் சவுதாலா

இவரைத் தொடர்ந்து, பா.ஜ.க எம்.எல்.ஏ லக்ஷ்மண் தாஸ் நாபாவும் தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அதோடு, இன்று நேராக டெல்லிக்குச் சென்று ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை நேரில் சந்தித்து, தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் சேரப்போவதாகவும் கூறியிருக்கிறார். இவர்களைப் போலவே, முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க ஓ.பி.சி மோர்ச்சா பிரிவின் மாநில தலைவருமான கரண் தேவ் கம்போஜ், சீட் மறுக்கப்பட்ட காரணத்தால் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். குறிப்பாக, `பா.ஜ.க-வுக்கு இனி விசுவாசிகள் யாரும் தேவையில்லை போல’ என கரண் தேவ் கம்போஜ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாஜக

இவர்கள் மட்டுமல்லாது, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத அமைச்சர் சஞ்சய் சிங், முன்னாள் அமைச்சர் சந்தீப் சிங் உட்பட சில சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கூடவே, கட்சியில் நீண்ட காலமாகப் பணியாற்றியவர்களை விடவும், சமீபத்தில் கட்சிக்குள் நுழைந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் இத்தகைய உட்கட்சி பூசல் கிளம்பியிருப்பதாகப் பேச்சுகள் அடிபடுகிறது. மறுபக்கம், பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வீதியில் போராடியவரும், ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருப்பதாக இறுதிப்போட்டியிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டவருமான வினேஷ் போகத் காங்கிரஸில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.