“மீனவர்கள், படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகை தள்ளுபடிக்கும் நடவடிக்கை தேவை” – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை உடனே விடுவிப்பதுடன், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தள்ளுபடி செய்யவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழக மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாக திகழும் நிலையில், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழக மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த ஜூலை 21-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம், கடந்த செப் 3-ம் தேதி ரூ.1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. இது ஏற்கெனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன், அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும். எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும், மீனவர்களை தாயகம் அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.