ஆந்திரா, தெலங்கானா மழை பாதிப்பு: காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து முடிக்க நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காப்பீட்டு கோரிக்கைகளை விரைவாக முடிக்க சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார்.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பயிர்கள், வாகனங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. காப்பீடு செய்யப்பட்டவற்றுக்கு உரிய இழப்பீடை விரைவாக வழங்க காப்பீட்டு நிறுவனங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறும், உரிமைகோரல் செயல்முறைகளை எளிதாக்கி உரிமைகோரல்களை விரைவாக தீர்க்குமாறும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு ஆதரவை வழங்கவும், பாலிசிதாரர்கள் தங்கள் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய நோடல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களை விளம்பரப்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மாநில அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் விஜயவாடாவில் நிலைமையை ஆய்வு செய்தனர். பின்னர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “விஜயவாடாவின் நிலைமை முன்னெப்போதும் இல்லாதது. குறுகிய காலத்தில் 400 மிமீ மழை பெய்துள்ளது. இது போன்ற ஒரு சம்பவம் இதற்கு முன் நடந்ததில்லை. முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குழுவுடன் தொடர்ந்து உழைத்து வருவதற்கு நன்றி. மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. மனித உயிர் இழப்புகள் மிகக் குறைவு. தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் இங்கு வேலை செய்கின்றன. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் இங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.” என குறிப்பிட்டார்.

விஜயவாடாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த, புடமேரு ஆற்றின் உடைப்புகளை சரி செய்வதற்கு ராணுவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு வருவதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் உள்ள என்டிஆர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சந்திரபாபு நாயுடு, “பாதிப்பை சரி செய்ய ராணுவமும் வருகிறது. செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்கிறோம்” என்று கூறினார்.

தெலங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 10,000 இழப்பீடு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்துள்ளார். கம்மம் கிராமப்புற மண்டலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளைக் கண்காணித்தார். கம்மம் ஊரக மண்டலத்தில் உள்ள கருணகிரி, ஜலகம்நகர், ராஜீவ் க்ருஹகல்பா மற்றும் பல கிராமங்களுக்கு பைக்கில் சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ளிக்கிழமை மாலைக்குள் ரூ.10,000 இழப்பீடு அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.