தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும்… காரணத்துடன் கருத்துச் சொன்ன Ex சிஎஸ்கே வீரர்

MS Dhoni: 2020ஆம் ஆண்டு ஆக. 15ஆம் தேதி அன்றே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார், எம்எஸ் தோனி. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய அணியில் தனது கேப்டன்ஸி பதவியையும் விராட் கோலியிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டார். அவருக்கு தற்போது வயது 43 ஆகிறது. இந்த வயதிலும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையேயும், முன்னாள் வீரர்கள் இடையேயும் நிலவுகிறது என்றால் அது சாமானியமானது அல்ல. 

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு கேப்டனாக 2008ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார் தோனி. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே தடைசெய்யப்பட்ட காலத்தை தவிர்த்து 2008 முதல் 2021 வரை தொடர்ச்சியாக கேப்டனாக இருந்து, இந்த காலகட்டங்களில் 4 கோப்பைகளையும் சிஎஸ்கேவுக்கு பெற்றுக்கொடுத்தார், தோனி. 2022இல் சிஎஸ்கே கேப்டன்ஸியை தோனி ஜடேஜாவிடம் ஒப்படைக்க, அந்த சீசன் சிஎஸ்கேவுக்கு பெரும் சொதப்பலாக தொடங்கியது. 

அடுத்த சீசனில் தோனி?

அதை தொடர்ந்து சில காரணங்களுக்காக ஜடேஜாவிடம் இருந்து தோனி மீண்டும் அந்த கேப்டன்ஸி பொறுப்பை பெற்றுக்கொண்டார். 2022இல் பாதி சீசனுக்கு அவர் தலைமையில்தான் சிஎஸ்கே விளையாடியது. அதன்பின் 2023இல் மீண்டுவந்து 5ஆவது கோப்பையை சிஎஸ்கே தட்டித்தூக்கியது, தோனி கேப்டன்ஸியில்… (Dhoni Captaincy)  கோப்பையை வென்ற கையோடு தோனியும் ஓய்வை அறிவித்துவிடுவார் என பலரும் நினைக்கையில், 2024 சீசன் முழுவதையும் ஒரு சாதாரண வீரராக விளையாடினார், கேப்டன்ஸியை ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார். இந்த தொடரில் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

தோனியின் கடைசி சீசன் சரியாக அமையவில்லையே என பலரும் நினைத்துக்கொண்டிருக்க, தோனி இன்று வரையிலும் ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவே இல்லை. அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் தொடர்ந்து நீடிக்கிறது. ஐபிஎல் ஏலத்தின் விதிமுறைகள் வரட்டும், அதன் கைகளிலேயே தான் விளையாடுவதா இல்லையா என்பது உள்ளது என தோனியும் ஒரு பேச்சுக்கு சொல்லிவைத்துவிட்டார்… ஆக தோனி அடுத்த சீசனில் விளையாடப்போவது ஏறத்தாழ உறுதி எனலாம். 

தோனி விளையாடினாலே போதும்…

தோனி மெகா ஏலத்தில் Uncapped வீரராக தக்கவைப்படுவாரா அல்லது குறைந்த தொகைக்கான வீரரான தக்கவைக்கப்படுவாரா என்பது வேறு கதை. விளையாடினாலே போதும் என்பதுதான் ரசிகர்களின் எண்ணமும், தோனியின் எண்ணமும் அதுவாக கூட இருக்கலாம்… ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்து எதிர்பார்ப்பு ஏற்கெனவே அதிகமாக இருக்கும் சூழலில், தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என உறுதியாகிவிட்டால் அடுத்த சீசன் குறித்த எதிர்பார்ப்பு வானளவிற்கு உயர்ந்துவிடும் எனலாம்.

பத்ரிநாத்தின் ஆசை

இந்நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான சுப்ரமணியம் பத்ரிநாத் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தோனி விளையாடும் வரை சிஎஸ்கேவின் கேப்டனாக அவரே இருக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர்,”தோனி விளையாடுகிறார் என்றால், அவர் விளையாடும் வரை, அவரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனது கருத்து அதுதான். 

உங்களுக்கே தெரியும், நீங்கள் களத்தில் யாரை கேப்டனாக வைத்தாலும் கூட, தோனி இருந்தால் வேறு யாரையும் கேப்டனாக பார்க்கவே முடியாது. யாரும் தோனி ஆக முடியாது என்று நான் நினைக்கிறேன். மேலும், நீங்கள் களத்தில் இருந்துகொண்டு ஒரு கேப்டன்னை உருவாக்க முடியாது என்றும் நினைக்கிறேன். அது வேலைக்கு ஆகுமா ஆகாதா என்பது எனக்கு தெரியவில்லை. எனவே, தோனி விளையாடும் வரை, அவர் தலைமை தாங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார். இது தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.