Sugarcane Juice: வாரம் 2 டம்ளர்; உங்களை ஹெல்தியாக்கும் இயற்கை டானிக்..! Health Tips

எல்லாக் காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம் கரும்புச்சாறுதான். கரும்புச்சாறில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் அடங்கியிருக்கின்றன என்கிற சித்த மருத்துவர் வேலாயுதம், அதன் மருத்துவ பலன்களை சொல்கிறார்.

உடலில் ஏற்படும் நீர் வறட்சி, நீரிழப்பு, உடல் சூட்டைத் தவிர்க்கவும் இது உதவும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும்.

இது, உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்துவதால், தொற்றுநோய்கள் நெருங்காது. கோடைக்காலத்தில் ஏற்படும் சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் நன்றாகப் பிரியும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும். 

sugarcane juice

இது, உடனடி ஆற்றல் தரும் இயற்கை டானிக்கும்கூட. பற்கள், எலும்புகளை வலுவாக்கும். உணவு உண்ட பிறகு கரும்புச்சாறு அருந்தினால், சாப்பிட்ட உணவை எளிதில் செரிமானமாக்க உதவும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது இந்த பானம். இதில் எக்கச்சக்க தாது உப்புக்கள் இருப்பதால், வாரம் இரண்டு முறை குடிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.

கரும்பு என்றதுமே அதில் குளுக்கோஸ் மட்டுமே இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். இதில் பல நுண்ணூட்டச் சத்துகளும் இருக்கின்றன. இதிலிருக்கும் சுக்ரோஸ், உடனடியாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது. கொஞ்சம் அதிகமாக அருந்தினாலோ, அல்லது அருந்தி நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். அதனால் இதை ஆங்கில மருத்துவத்தில் `லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்’ உள்ளது என்கிறார்கள். எனவே, சர்க்கரை நோயாளிகள் அரை டம்ளர் வீதம் வாரத்துக்கு இரண்டு முறை குடிக்கலாம்.

கரும்புச்சாற்றில் எலுமிச்சை, இஞ்சி சேர்ப்பது கூடுதல் பலன் தரும். இதுவும்கூட ஒரு வகையில் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைக் குறைக்கும். எனவே, அவற்றைச் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

வேலாயுதம்
சித்த மருத்துவர்

கரும்பு ஜூஸ் குடிப்பதில் பலரும் செய்யும் தவறு, அதனுடன் ஐஸ் சேர்ப்பது. குடிக்கும்போது ஜில்லென்றிருந்தாலும், குடித்த பிறகு அது உடல் சூட்டை அதிகரித்துவிடும். மேலும், அந்த ஐஸ் கட்டிகள் சுகாதாரமான தண்ணீரில் தயாரிக்கப்பட்டவையா என்பதும் நமக்குத் தெரியாது. எனவே, கரும்புச்சாற்றில் ஐஸ் சேர்த்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால், மண்பானையில் ஊற்றிக் குடிக்கலாம்.

பெரும்பாலான கருப்பு ஜூஸ் கடைகளில், ஒரு பாத்திரத்தில் ஐஸைக் கொட்டி,  நம் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வைத்து கரும்பு ஜூஸைப் பிடிப்பார்கள். சிலர் கரும்பு ஜூஸில் தண்ணீர், சாக்கரின் போன்றவற்றைக் கலந்து விற்கிறார்கள். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.!

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.