அக்.27-ல் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு: நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு அக்.27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர். இதையடுத்து, கடந்த ஆக.28-ம் தேதி விழுப்புரம் மாவட்டகாவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி மனு அளித்தார்.

ஆனாலும், காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. குறிப்பாக, மாநாடு தொடர்பாக 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு காவல் துறை கூறியது. அதற்கு கட்சிசார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மாநாடு நடத்த காவல் துறை அனுமதிவழங்கியது. ஆனால், குறுகிய அவகாசமேஇருந்ததால், மாநாடு அக்டோபர் மாதம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கட்சித் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும், பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கட்சி கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுதேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழகஅரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கட்சியின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடுஅக்.27-ம் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு,நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும், நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும், பெருவிழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களின் மனங்களைதீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையஉள்ள மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில்,அதற்கான களப் பணிகளும் தொடங்கப்படஉள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம். நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும், ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம். வாகை சூடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக மாநாட்டு தேதியை விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பல இடங்களிலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.