Meenaskshi Mission: 'புற்றுநோயிலிருந்து மீண்ட சாம்பியன்கள்'; புற்றுநோய் விழிப்புணர்வு 'மாரத்தான்’

மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி M.S. சங்கீதா ஐ.ஏ.எஸ், இம்மாரத்தான் நிகழ்வில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்; இதில் குழந்தைப்பருவ புற்றுநோயிலிருந்து மீண்டு குணமடைந்தவர்கள், பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 500 பேர் பங்கேற்பு.

குழந்தைப்பருவ புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை அதிகரிக்க மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்து நடத்திய சாம்பியன்ஸ் மாரத்தான் நிகழ்வில் குழந்தைப்பருவ புற்றுநோயிலிருந்து சிகிச்சையால் குணமடைந்து மீண்டவர்கள் நம்பிக்கையையும், மீண்டெழும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். எல்காட் ஐடி பூங்காவில் தொடங்கிய இந்த மாரத்தான் நிகழ்வு, மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில் குழந்தைப்பருவ புற்றுநோயிலிருந்து மீண்டு குணமடைந்தவர்கள், பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 500 பேர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர். திருமதி M. S. சங்கீதா ஐ.ஏ.எஸ், அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்த இம்மாரத்தான் நிகழ்வில் S.R. டிரஸ்ட்-ன் செயலர் மற்றும் அறங்காவலர் திருமதி . C. காமினி குருசங்கர், HCL டெக் – மதுரை மையத்தின் தலைவர் திரு. திருமுருகன் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன், மருத்துவ இயக்குநர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி, பொது மருத்துவ துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். P. கிருஷ்ணமூர்த்தி, சிறுநீரகவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். K. சம்பத்குமார் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாரத்தான் நிகழ்வைத் தொடர்ந்து, பல்வேறு நடன நிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேட போட்டிகளில் , புற்றுநோயிலிருந்து மீண்ட இளம் சிறார்கள் அவர்களது சிறப்பான திறன்களை அழகாக வெளிப்படுத்தினர். புற்றுநோயிலிருந்து குணமடைந்து வாழ்கிற பெரியவர்கள், இளம் நோயாளிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தங்கள் வாழ்க்கையின் சாதனை கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். “குழந்தைப்பருவ புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடியதே” என்ற சக்தி வாய்ந்த செய்தியினை வழங்கிய ஓரங்க நாடகத்தை மருத்துவமனையின் பணியாளர்கள் வழங்கியது இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இந்த நாடகம், நம்பிக்கை மற்றும் மனதைரியத்தை வலியுறுத்தியது.

பாதிப்பிலிருந்து மீண்டெழும் ஆற்றல், நம்பிக்கை மற்றும் மானுட உணர்வின் ஆற்றலுக்கு வாழும் சான்றாக குழந்தைப்பருவ புற்றுநோயிலிருந்து மீண்ட ஒவ்வொரு நபரும் திகழ்கின்றனர் என்று தலைமை உரையாற்றிய திருமதி. M.S. சங்கீதா கூறினார். அவர் மேலும் பேசுகையில், “புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர்பிழைத்தவர்களின் வெற்றியை நாம் கொண்டாடுகிற அதே தருணத்தில், குழந்தைப்பருவ புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில்  சரியான சிகிச்சையைப் பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்வதும் மிக முக்கியமானது. உயிர்பிழைப்பு விகிதத்தை மேம்படுத்துவதிலும், சிறப்பான சிகிச்சை விளைவுகளை உறுதி செய்வதிலும் தொடக்க நிலையிலேயே நோய் கண்டறிதல் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான நேரத்தில், சரியான சிகிச்சையை வழங்கி அதிக குழந்தைகள் உயிர்பிழைக்கவும் இது வகை செய்கிறது. ஒரு சமூகமாக, குழந்தைப்பருவ புற்றுநோயின் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகளுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். சாத்தியமுள்ள சிறந்த மருத்துவ சிகிச்சை இத்தகைய குழந்தை ஒவ்வொன்றிற்கும் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

சிறப்புரையாற்றிய திருமதி. காமினி குருசங்கர், “0-14 வயது பிரிவில் வருகிற குழந்தைப்பருவ புற்றுநோய்கள் குடும்பங்கள் மீது உணர்வு ரீதியில் மிகப்பெரிய சுமையை ஏற்றுன்றன. நாட்டில் நிகழ்கிற அனைத்து புற்றுநோய்களிலும் இதன் பங்கு 4% என்பதாக மட்டுமே இருக்கிறபோதிலும், இதன் பாதிப்பு மிகப்பெரியது. அதிர்ஷ்டவசமாக மருத்துவ தொழில்நுட்பங்களில் நிகழ்ந்திருக்கிற முன்னேற்றங்களினால் அதிக வெற்றி விகிதத்துடன்  சிகிச்சையின் மூலம் அதிக குணப்படுத்தக்கூடியதாக குழந்தைப்பருவ புற்றுநோய்கள் இப்போது  மாறியிருக்கின்றன. தென்தமிழ்நாட்டிலும், அதைக்கடந்த பகுதிகளிலும் குழந்தைகளுக்கான சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தி நவீன சிகிச்சையினை உறுதி செய்வதில் MMHRC தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 1,200-க்கும் அதிகமான குழந்தைப்பருவ புற்றுநோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சையை  வழங்கி வருகிறோம். அதில் 80% வெற்றி விகிதத்தையும் சாதித்திருக்கிறோம். இத்தகைய சூழலில் இந்த மாரத்தான் என்பது வெறுமனே ஒரு நிகழ்வு மட்டுமல்ல; புற்றுநோயை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு ஆற்றல்மிக்கவர்களாக உருவெடுத்திருக்கும் சிறார்களின் வாழ்க்கை, நம்பிக்கை மற்றும் வியக்கவைக்கும் ஆற்றலின் கொண்டாட்டமாக இது திகழ்கிறது. இன்று நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சிகிச்சைகளை மேம்படுத்தும் குறிக்கோளை நோக்கி நம்மை நெருக்கமாக அழைத்துச் செல்லும். குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் அவசியமான சிகிச்சையையும், ஆதரவையும் அவர்கள் பெறுவதை உறுதி செய்யும்” என்று கூறினார்.

குழந்தைகளுக்கான இரத்தப் புற்றுநோயியல், இரத்தவியல் மற்றும் எலும்புமஜ்ஜை மாற்றுசிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். காசி விஸ்வநாதன் பேசுகையில், “தென்தமிழ்நாட்டில் குழந்தைப்பருவ புற்றுநோய் சிகிச்சையில் முதன்மை மையமாக இம்மருத்துவமனை தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. 2014-ம் ஆண்டிலிருந்து, உயிருக்கு அச்சுறுத்தலான இரத்தக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களுக்கு  சிறப்பான சிகிச்சைகளை வழங்கி எலும்புமஜ்ஜை மாற்று சிகிச்சையில் முன்னோடியாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எலும்புமஜ்ஜை உறுப்பு மாற்று சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டதிலிருந்து 236 குழந்தைகளுக்கு இச்சிகிச்சையை நாங்கள் வெற்றிகரமாக வழங்கியிருக்கிறோம். புற்றுநோய் பராமரிப்பு மற்றும் எலும்புமஜ்ஜை சிகிச்சையில் எங்களது விரிவான அணுகுமுறை, தென்தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக மதுரையில் மிக நவீன உயிர்காக்கும் சிகிச்சைகளை பெறுவதற்கான வசதியை உறுதி செய்திருக்கிறது. வெகு தூரத்திலுள்ள பெருநகரங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கியிருக்கிறது” என்று கூறினார்.

லுகேமியா, லிம்போமா,மூளை புற்றுநோய் கட்டிகள் மற்றும் திடமான கட்டிகள் போன்ற புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவத்துடன் சிறார்களுக்கான புற்றுநோயியலில் MMHRC முதலிடம் வகிக்கிறது. மிக நவீன மருத்துவ தொழில்நுட்பம், மேம்பட்ட சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் கனிவான பராமரிப்பு ஆகியவற்றை பயன்படுத்தி,  குழந்தைகளுக்கான புற்றுநோயியல் சிகிச்சை குழுவினர் சிகிச்சை மீது மட்டும் கவனம் செலுத்துவதோடு  நிறுத்திக் கொள்ளாமல் இளம் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பாடுபடுகின்றனர்.

பணப்பிரச்சினைகள் காரணமாக  உயிர்காக்கும் சிகிச்சையை பெற இயலாமல் குழந்தைகள் அவதிப்படுவதை தடுக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு திட்டங்களோடு MMHRC இணைந்து செயல்பட்டு வருகிறது. புற்றுநோய் பாதிப்புள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆதரவளிக்க மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு நிதிதிரட்டல் முயற்சியாக “கமிலா கேன்சர் ஃபண்டு” என்ற ஒரு முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்கு பணம் தேவைப்படும் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவுகிறது. எந்தவொரு குழந்தையும் அதன் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக சிகிச்சை பெற இயலாமல் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் நிதிவசதி இல்லாத குடும்பங்களுக்கு கட்டணத்தில் கணிசமான சலுகைகளை MMHRC வழங்குகிறது.

முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் வழியாக (CMCHIS) இரத்தக்கோளாறு என்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புள்ள குழந்தைகளுக்கு எலும்புமஜ்ஜை மாற்று சிகிச்சைகளை நோயாளிகளுக்கு கட்டணம் ஏதுமின்றி இம்மருத்துவமனை வழங்குகிறது. குழந்தைப்பருவ புற்றுநோய் சிகிச்சைக்கான சுமையை இன்னும் குறைக்க பிரதம மந்திரியின் நிதி ஆதரவு திட்டமும் உதவுகிறது. இந்த முன்னெடுப்பு திட்டங்களும், MMHRC குழுவின் தளர்வற்ற முயற்சிகளும், குழந்தைப்பருவ புற்றுநோய்க்கு உயிர்காக்கும் சிகிச்சையை வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பெறுவதை ஏதுவாக்கியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.