தீவிரமாக தாக்கப்பட்டால் அணுஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயங்காது: புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தீவிர தாக்குதல் நடத்தப்படுமானால், அணுஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் இரண்டரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், தீவிர ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யாவுக்கு எதிராக தொடுக்க உக்ரைனுக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகிறது. அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டிருப்பதை இது உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “அணுஆயுதமற்ற ஒரு நாடு(உக்ரைன்), அணுஆயுத நாடுகளோடு சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக தீவிர ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமானால், இதனை ரஷ்யாவுக்கு எதிரான அணுஆயுத நாடுகளின் தாக்குதலாகவே ரஷ்யா கருதும். அத்தகைய ஒரு சூழல் ஏற்படுமானால், அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ரஷ்யா பின்பற்றி வரும் கொள்கை மாற்றத்துக்கு உள்ளாகும். இதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் உக்ரைன் மட்டுமல்லாது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புதின் அணுஆயுத எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா அணுஆயுத தாக்குதல் நடத்துமானால் அதற்கு உத்தரவு பிறப்பிக்கும் தலைமை இடத்தில் விளாடிமிர் புதின் இருக்கிறார். அவர் உத்தரவிட்டால் ரஷ்ய ராணுவம் அணுஆயுத தாக்குதல்களை நடத்தும். இந்நிலையில், உலகின் மிகப் பெரிய அணுஆயுத நாடுகளில் ஒன்றான ரஷ்யாவின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் அணுஆயுதக் கொள்கையை கடந்த 2020ம் ஆண்டு விளாடிமிர் புதின் மாற்றி அமைத்தார். எதிரியால் அணுசக்தி தாக்குதல் நடத்தப்பட்டாலோ அல்லது அரசின் இருப்பை அச்சுறுத்தும் தீவிர தாக்குதல்கள் நடத்தப்பட்டாலோ ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று அது கூறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.