போக்சோ வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை: 70 வயது முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல்

புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களில் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவருக்கு மரண தண்டனையும், 70 வயது முதியவர் ஒருவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.

கொல்கத்தா வழக்கு: தென்-கிழக்கு கொல்கத்தாவில் உள்ள டில்ஜலா பகுதியில் வசித்து வந்த 7 வயது சிறுமி கடந்தாண்டு மார்ச் 26-ல் திடீரென மாயமானார். இதையடுத்து, காவல் துறையினர் அந்த சிறுமியை தேடிவந்த நிலையில் பக்கத்து வீட்டிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் இந்த கொடூர செயலை செய்தது விசாரணையில் அம்பலமானதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அலிப்போர் நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி சுதிப்தோ பட்டாச்சார்யா, இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காக கருதி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தார். மேலும், மேற்கு வங்க அரசு பாதிக்கப்பட்ட சிறுமியின் அம்மாவுக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையாக வழங்கவும் உத்தரவிட்டார்.

அருணாச்சல் வழக்கு: அருணாச்சல பிரதேசத்தில் ஷி-யோமி மாவட்டத்தில் யம்கென் பக்ரா என்பவர் சிறார்கள் தங்கிப்படிக்கும் பள்ளியை நடத்தி வந்தார். இங்கு, 6 முதல் 15 வயது வரை உள்ள சிறார்கள் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், 15 சிறுமிகள் உட்பட 21 பேருக்கு யம்கென் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்ததையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த யுப்பியா நீதிமன்றம் யம்கென் பக்ராவுக்கு மரண தண்டனையும், அவருக்கு உதவியாக இருந்த இருவருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது..

திரிபுரா வழக்கு: வடக்கு திரிபுராவின் தர்மாநகர் சகய்பாரி வனப்பகுதியில் கடந்த ஆண்டு ஜூலையில் 6-வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஹஷித் அலி என்ற 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடரந்து, குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அங்ஷுமன் தீபர்மா நேற்று தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறையில் இருக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.