பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை,

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா சென்றார். 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 14-ந்தேதி அவர் சென்னை திரும்பினார்.அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன் ” என்று கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரவு டெல்லி சென்றடைந்தார் . இந்த நிலையில் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார் . டெல்லி பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது சுமார் 45 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது.

இந்த சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.