ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இங்கிலாந்து ஆதரவு

லண்டன்,

ஐக்கிய நாடுகள் சபையில் 200 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. எனினும், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மீதமுள்ள 10 நாடுகள், 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.

சர்வதேச அளவில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், சீனா இதற்கு உடன்படவில்லை. இந்த நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் கூறுகையில், ” பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் அளிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்றார்.

அதேபோல, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது: ஐ.நா.,வை மேலும் திறனுடையதாக மாற்ற வேண்டும். பாதுகாப்பு சபை அதிகளவு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலின் பணி முறைகளில் மாற்றம், பெரிய குற்றச் செயல்களில் வீட்டோ உரிமையின் வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.