இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (PIPS) இடையில் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (Pakistan Institute for Parliamentary Services – PIPS) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் (19) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 

அதற்கமைய, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகம் சார்பில் பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் அவர்களும், இலங்கை பாராளுமன்றம் சார்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் கையொப்பமிட்டனர். இதன்போது பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹஸன் ஹஷ்மி மற்றும் பாராளுமன்றத்தின் பிரதான ஒழுங்கு மரபு உத்தியோகத்தர் அமா விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கிடையில் அறிவைப் பகிந்துகொள்ளும் செயற்பாடுகள் ஊடாக பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களை ஊக்குவித்தல் மற்றும் சட்டவாக்க நடைமுறைகளை வலுப்படுத்தல் என்பன இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும், ஒப்பந்தத்தை கையொப்பமிட்டதன் பின்னர் அதனை உயிர்ப்புடனும் செயற்பாட்டு ரீதியான கூட்டாக மாற்றுவது மிகவும் முக்கியமானது என பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். அத்துடன், இதனால் இரு நாடுகளினதும் சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையில் நிலவும் நெருக்கமான ஒத்துழைப்பு விருத்தியடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குறிப்பிடுகையில், இலங்கை பாராளுமன்றத்தின் பணியாளர்களுக்கு பயிற்சி வாய்ப்புக்களை வழக்கும் போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பயனுள்ளதாக அமையும் எனவும், இதன்மூலம் சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்வதற்கும் விசேட நிபுணத்துவ அறிவைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக சட்டவாக்க செயன்முறைக்கு ஆதரவளிப்பதற்கு அவர்களுக்கு இயலும் எனவும் தெரிவித்தார். 

அதற்கு மேலதிகமாக, இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கையின் அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மற்றும் பாராளுமன்றத்தின் பணிகளும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.