கோவை பாப்பம்மாள் மறைவு: பிரதமர் மோடி புகழஞ்சலி

உடல்நலக்குறைவால் மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாப்பம்மாள் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். இயற்கை வேளாண் துறையில் அவர் முத்திரை பதித்தார். அவருடைய அன்பும், எளிமையும் மக்களை ஈர்த்தது. அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விருதுகளைக் குவித்த பாப்பம்மாள்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள். 108 வயதான இவர், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வந்தார். இயற்கை விவசாயத்தை மேம்படுத்த இவர் ஆற்றி வந்த சேவைகளை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு மூதாட்டி பாப்பம்மாளுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக சார்பில் ‘பெரியார் விருது’ மூதாட்டி பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

தினமும் வயல்வெளிக்குச் சென்று இயற்கை விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்த மூதாட்டி பாப்பம்மாள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வயோதிகத்தின் காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு படுத்த படுக்கையானார். படுக்கையில் இருந்தபடியே உணவுகளை, மருந்துகளை எடுத்து வந்தார். அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (செப்.27) இரவு தனது வயோதிக்கத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர், அரசியல் கட்சித் தலைவர், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.