‘பொறுமையை சோதிக்காதீர்’- ஆர்எஸ்எஸ் ஊர்வல வழக்கில் போலீஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: “ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கும் விவகாரத்தில் பொறுமையை சோதிக்க வேண்டாம்,” என போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்.6-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்கக் கோரி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “தமிழகம் முழுவதும் மொத்தம் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், 42 இடங்களில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 16 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரப்பட்டதால் பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக அங்கு அனுமதி வழங்கப்படவில்லை,” என்றார்.

அப்போது, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், ஜி.கார்த்திகேயன், என்.எல்.ராஜா, ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர், “தற்போது அற்ப காரணங்களைக் கூறி போலீஸார் பல இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்துள்ளனர். அனுமதி வழங்கியுள்ள இடங்களிலும் நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதி்த்துள்ளனர். ஆர்எஸ்எஸ் தவிர்த்து மற்ற எல்லா அமைப்புகளுக்கும் அனுமதியளிக்கும் போலீஸார், அவர்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் விதிப்பது இல்லை. சட்டவிரோத அமைப்புகளுக்குக் கூட அனுமதி வழங்குகின்றனர். ஆனால், ஆர்எஸ்எஸ் என வந்துவிட்டால் மட்டும் ஆளுங்கட்சியினர் அரசியல் ரீதியாக போலீஸாருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசும், போலீஸாரும் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர். மற்ற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் தாலுகா வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் தான் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்ற படியேறி போராட வேண்டியுள்ளது. ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறுவதை ஏற்க முடியாது. எனவே, விண்ணப்பித்த அனைத்து இடங்களிலும் இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்தவும், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தவும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்,” என வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர், ‘ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே விதிமுறைகளை வகுத்துள்ள நிலையில், போலீஸார் பாதுகாப்பு வழங்க முடியாது என அற்ப காரணங்களைக்கூறி அனுமதி வழங்க மறுப்பது ஏன்? இவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன?

ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டும் போலீஸார், திமுக பவள விழா நிகழ்வுகளுக்கு மட்டும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கியது எப்படி?’ என கேள்வி எழுப்பினார். பின்னர் அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட 42 இடங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தும் முடிவு எடுத்து போலீஸார் நாளை (அக்.1) தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.