துணை முதல்வரான பின்பு மதுரைக்கு வந்த உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு

மதுரை: துணை முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக இன்று இரவு மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் திமுகவினர் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

விருதுநகரில் அக்.01-ல் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் வகையில் இன்று இரவு 8.30 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக வருகை தருவதால் மதுரை வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க திட்டமிட்டிருந்தனர். அதனையொட்டி அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் பல்லாயிரக்கணக்கான கட்சியினர் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

இன்று இரவு 8.30 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்த துணை முதல்வர் உதயநிதியை, அமைச்சர் பி.மூர்த்தி வரவேற்றார். பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் சங்கீதா, தென்மண்டல ஐஜி பிரேம்ஆன்ந்த் சின்கா, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த், மதுரை தெற்கு திமுக மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் வெளியே வந்த துணை முதல்வர், திரண்டிருந்த திமுகவினரை பார்த்து கையசைத்தார். பின்னர் கட்சியினர் வழங்கிய அவருக்கு புத்தகங்கள், சால்வைகள் பரிசாக அளித்தனர். வழிநெடுகிலும் கட்சியினர் திரண்டிருந்து வரவேற்றனர். பின்னர் மதுரை அழகர்கோயில் சாலையிலிருந்து தனியார் ஹோட்டலில் தங்குகிறார். பின்னர் நாளை (அக்.1) இங்கிருந்து விருதுநகர் புறப்பட்டு அரசு விழாவில் பங்கேற்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.