விழுப்புரம்: 'என்னை சேர்ல கூட உட்கார விடல…' – வருந்தும் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்

விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவரான சங்கீதா என்பவர் சமீபத்தில் கிராமச்சபை கூட்டத்தை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்.

தன்னுடைய நாற்காலியில் கூட தன்னை அமரவிடாமல் தரக்குறைவாக நடத்தி அவமானப்படுத்துகின்றனர் எனக்கூறி அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளெல்லாம் அதிர்ச்சியை உண்டாக்கியது. விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா், பொது இடத்தில் தா்ணாவில் ஈடுபட்டதால் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். என்ன நடந்தது என்பதைப் பற்றிய தெளிவாக அறிந்துகொள்ள சங்கீதாவையே தொடர்புகொண்டு பேசினோம். இதுதொடர்பாக நம்மிடையே பேசிய சங்கீதா, “பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த நான் விழுப்புரம் மாவட்டம் ஆனாகூர் ஊராட்சி மன்றத் தலைவரா இருக்கேன். என்னோட வேலையை துணை தலைவர் செய்யவிடறதே இல்லை.

ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா

அவருடைய கணவர் நிர்வாகத்துக்குள்ள வந்து தலையிட்டு எல்லா முடிவுகளையும் எடுப்பாரு. அவுங்க தம்பியும் இதுல தலையிடுவாரு. நான் தேர்தலில் ஜெயிச்சு மூணு வருஷமாகுது. நான் ஜெயிச்சதுக்கு அப்புறம் முதன் முதலாக நடந்த கிராம சபை கூட்டத்துக்கு நான் போயிருந்தேன். அப்போ என்னை சேர்ல கூட உட்கார விடாம கீழ உட்கார வச்சாங்க. எந்த வேலையா இருந்தாலும் அவுங்கதான் செய்வாங்க.

என்னைய எதுவுமே செய்ய விடமாட்டாங்க. எந்த ஒரு முடிவையும் என்னால எடுக்க முடியாது. எல்லாத்தையும் அவுங்கள கேட்டுதான் செய்யனும்னு சொல்லுவாங்க. நடந்து முடிஞ்ச சுதந்திர தினத்தப்போ கொடியை ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான் ஏற்றனும்னு சொன்னாங்க. எதாச்சும் பிரச்னை இருந்தால் காவல்துறையினர் எங்ககிட்ட சொல்லுங்கனு சொன்னாங்க. நானும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லனு சொல்லிட்டேன். ஆனால் நான் கொடி ஏற்றப்போகும்போது துணைதலைவர் வந்து நானும் சேர்ந்துதான் ஏற்றுவேன்னு அந்தக் கொடியை என்னைய தனியாக கூட ஏற்ற விடல.

ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா

இந்த பிரச்னையை எந்த உயர் அதிகாரிங்க கிட்ட சொன்னாலும் அவுங்களுக்கு நிறைய அரசியல்வாதிங்களைத் தெரியும், அதுனால சண்ட வேணாம். சமாதனமா போயிடுங்கனு சொல்லுவாங்க. இந்த மாதிரிதான் மூணு வருஷமா என்னைய நடத்திட்டு இருக்காங்க. வார்டு மெம்பர் ஒருத்தவுங்க இருக்காங்க. அவுங்களும் என்னை தரகுறைவாகத்தான் பேசுவாங்க. படிப்பறிவு இல்லாத ஒரு தலைவர், இந்த சேர்ல உட்கார தகுதியே இல்ல, சாதி பெயரைச் சொல்லி என்னைத் தரகுறைவாகப் பேசுவாங்க. உன்னைய ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்தது நாங்கதானு சொல்லுவாங்க.

அப்போ மக்கள்தான் என்னைய தேர்ந்தெடுத்தாங்கனு நான் சொல்லுவேன். இந்த மாதிரி வேலை செய்யுற இடத்துலேயே எங்களுக்குள்ள வாக்குவாதம் நடக்கும். `நீ ஒரு தலைவராக இருந்தாலுமே உன்னால எதையும் செய்ய முடியாது. எங்களாலத்தான் எல்லாத்தையும் செய்ய முடியும்’னு வீம்பா பேசுவாங்க. நான் இதுதொடர்பாக புகார் கொடுத்தாலும் எல்லா உயர் அதிகாரிகளும் அவுங்களுக்கு ஆதரவாகத்தான் பேசுறாங்க. ஊரகவளர்ச்சித் துறை, ஆட்சியர், முதல்வர் ஆகியோருக்கும் புகார் மனு அளிச்சிருக்கேன்.

ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா

ஆனால் யாருமே தகுந்த நடவடிக்கை எடுக்கல. அதனாலத்தான் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து போராட்டத்துல ஈடுபட்டேன். நான் அவுங்க மேல புகார் கொடுத்துருக்கேன். அதை வாபஸ் வாங்குங்கன்னு உயர் அதிகாரிங்க மூலமா அழுத்தம் கொடுக்குறாங்க. ஆனால் நான் வாபஸ் வாங்கல. இனி வாங்கவும் மாட்டேன். தொடர்ந்து போராடுவேன்” என மனமுடைந்த நிலையிலும் நம்பிக்கையோடு பேசி முடித்தார்.

சமூக நீதி என பேசிக்கொண்டே சமூக அநீதியை இழைப்பது திமுகவின் தொடர் கதையாகிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விவகாரத்தில் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.