முதன்முறையாக இந்தியாவில் இருந்தே கைலாஷ் சிகரத்தைப் பார்த்த பக்தர்கள்

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் உள்ள பழைய லிபுலேக் கணவாயில் இருந்து, சிவபெருமானின் உறைவிடமாகக் கருதப்படும் புனித கைலாஷ் சிகரத்தை பக்தர்கள் பார்த்துப் பரவசமடைந்தனர். இதற்கான வசதியை உத்தராகண்ட் அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தின் வியாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது பழைய லிபுலேக் கணவாய். இது மகத்தான மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இங்கிருந்தவாறு, 96 கிலோ மீட்டர் தொலைவில், சீனாவின் திபெத் எல்லைக்குள் உள்ள கைலாஷ் சிகரத்தை முதன்முறையாக பக்தர்கள் நேற்று (வியாழக்கிழமை) பார்த்து பரவசமடைந்தனர். இந்திய எல்லைக்குள் இருந்து கைலாஷ் சிகரத்தைப் பார்த்த முதல் பக்தர்கள் குழு இதுவாகும்.

இது குறித்து தெரிவித்த பித்தோராகரின் மாவட்ட சுற்றுலா அதிகாரி கிருதி சந்திர ஆர்யா, “ஐந்து யாத்ரீகர்கள் கொண்ட முதல் குழு, பழைய லிபுலேக் கணவாயில் இருந்து கைலாஷ் சிகரத்தை பார்வையிட்டது. அவர்களுக்கு இது ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. பழைய லிபுலேக் கணவாயில் இருந்து புனித கைலாஷ் சிகரத்தைப் பார்த்தபோது ஐந்து பக்தர்களும் மிகவும் உற்சாகமடைந்தனர். அனைவரும் கண்ணீருடன் இருந்தனர்” என்று கூறினார்.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலைச் சேர்ந்த நீரஜ் மற்றும் மோகினி, சண்டிகரைச் சேர்ந்த அமந்தீப் குமார் ஜிண்டால், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த கேவல் கிரிஷன் மற்றும் நரேந்திர குமார் ஆகிய 5 பேர், இந்த குழுவில் இருந்தனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “இந்திய எல்லைக்குள் இருந்து கைலாஷ் சிகரத்தை பார்ப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த அனைத்து துறைகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது மாநில அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இனி, சிவ பக்தர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய எல்லைக்குள் இருந்தே தெய்வத்தை தரிசனம் செய்யலாம்.” என்று கூறினார்.

உத்தராகண்ட் சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகராஜ், “முதல் பயணத்தை வெற்றிகரமாக நடத்தியது சிவ பக்தர்களின் வரலாற்று நிகழ்வு. பக்தர்களுக்கு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குவதில் மாநில அரசு உறுதிபூண்டுள்ளது” என தெரிவித்தார்.

பழைய லிபுலேக் கணவாய் என்பது நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைப் பகுதியில் இருந்து கைலாஷ் சிகரத்தை தரிசிப்பதற்கான சுற்றுலாத் திட்டத்தை உத்தராகண்ட் சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக, சில மாதங்களுக்கு முன்பு உத்தராகண்ட் சுற்றுலாத் துறை, எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐடிபிபி) ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழு, கைலாஷ் மலை தெளிவாகத் தெரியும் இடத்தைக் கண்டுபிடித்தது. இதையடுத்து, உத்தராகண்ட் சுற்றுலாத் துறையால் கைலாஷ், ஆதி கைலாஷ் மற்றும் ஓம் பர்வத் மலைகளின் ‘தரிசனம்’ உள்ளடக்கிய பேக்கேஜ் டூர் தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நான்கு இரவுகள் மற்றும் ஐந்து பகல்களுக்கான பேக்கேஜிங்கிற்கு ஜிஎஸ்டி உட்பட ஒரு சுற்றுலாப் பயணிக்கு ₹80,000 செலவாகும். இதற்கு kmvn.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.