வருண் சக்ரவர்த்தியால் வீட்டுக்கு போகும் இந்த 3 ஸ்பின்னர்கள் – இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை ராஜா

India National Cricket Team, Varun Chakravarthy: இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி (IND vs BAN, 1st T20I) மத்திய பிரதேசம் குவாலியர் நகரில் நேற்றிரவு (அக். 6) நடைபெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் நேற்று அறிமுகமாகினர். நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி, 127 ரன்களில் வங்கதேசத்தை ஆல்-அவுட்டாகியது. வங்கதேசம் தரப்பில் மெஹிடி ஹாசன் மிராஸ் 35 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹைசன் ஷாண்டோ 27 ரன்களையும் அதிகபட்சமாக அடித்தனர். 

இந்திய அணியின் ஒட்டுமொத்த வெற்றி

இந்திய அணி (Team India) பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 3.5 ஓவர்களை மட்டுமே வீசி 14 ரன்களை மட்டுமே கொடுத்ததார். சிறப்பான பந்துவீச்சு காரணமாக அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகனாக தேர்வானார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தி 21 ரன்களை கொடுத்தார். அதிலும் 1 ஓவர் மெய்டன் ஆகும். இவர் அதிகபட்சமாக மணிக்கு 149.9 கி.மீ., வேகத்தில் வீசினார். அதே நேரத்தில், மணிக்கு 106.2 கி.மீ., வேகத்திலும் வீசி தனது வேரியஷனை காட்டினார். நேற்று சராசரியாக மணிக்கு 140 கி.மீ., வேகத்திலேயே மயங்க் யாதவ் பந்தவீசினார் எனலாம்.

இந்திய அணி 128 ரன்கள் இலக்கை 49 பந்துகளை மிச்சம் வைத்து அடித்துவிட்டது. சஞ்சு சாம்சன் 29, அபிஷேக் 16, சூர்யகுமார் யாதவ் 29 என அதிரடியான தொடக்கம் கொடுத்து ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா அதே அதிரடியுடன் ஆட்டத்தையும் முடித்துவைத்தார். ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 39 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 243.7 ஆக இருந்தது. ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும், பீல்டிங்கில் 2 கேட்சையும் பிடித்து மிரட்டினார்.

மாஸ் கம்பேக் கொடுத்த வருண் சக்ரவர்த்தி

இவர்கள் அனைவரும் ஒருபுறம் இருக்க சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணிக்குள் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வருண் சக்ரவர்த்தி (Varun Chakravarthy) மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார். தனது மிஸ்ட்ரி ஸ்பின்னால் எதிரணியை வருண் சக்ரவர்த்தி கலங்கடித்தார். இவர் டி20க்கு மட்டுமின்றி நிச்சயம் ஓடிஐ போட்டிகளிலும் இந்திய அணியின் மிடில் ஓவர் பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் இருப்பார். எனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருண் சக்ரவர்த்திக்கு நிச்சயம் கம்பீர் வாய்ப்பளிக்கலாம். அந்த வகையில், இந்திய அணிக்குள் வருண் சக்ரவர்த்தியின் இந்த வருகையால் இந்த மூன்று இந்திய ஸ்பின்னர்கள் இனி வொயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை எனலாம். 

Varun Chakravarthy finishes with a three-wicket haul in his comeback matc
Second catch for Hardik Pandya 

Live – https://t.co/Q8cyP5jXLe#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/3CxbO56Z4Z

— BCCI (@BCCI) October 6, 2024

ரவிசந்திரன் அஸ்வின்

அடுத்தாண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடராக இருக்கட்டும், 2026இல் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடராகக் கூட இருக்கட்டும் அஸ்வின் (Ravichandran Ashwin) இந்திய அணியில் விளையாடுவது கேள்விக்குறிதான். 2023ஆம் ஆண்டிலேயே அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்ட எதிர்பாராத காயம் காரணமாகவே அஸ்வின் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். அவருக்கு வயது 38 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது வருணின் வருகையால் அவருக்கான வாய்ப்பு மிக மிக மங்கிவிட்டது.

யுஸ்வேந்திர சஹால்

யுஸ்வேந்திர சஹால் (Yuzvendra Chahal) கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் கடைசியாக சர்வதேச ஓடிஐ போட்டியில் விளையாடி உள்ளார். 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடைசியாக சர்வதேச டி20 போட்டியில் விளையாடியிருக்கிறார். இவர் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணிக்காக விளையாடியதில்லை. இப்போது கவுண்டி கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பி வந்தாலும் கூட இவருக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2024 டி20 உலகக்கோப்பை அணியில் சஹால் இடம்பெற்றிருந்தாலும் கூட காம்பினேஷன் காரணமாக பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 34 வயதான லெக் ஸ்பின்னர் சஹாலுக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் கிடைப்பது தற்போது வருண் சக்ரவர்த்தியால் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. 

ரவி பிஷ்னோய் 

டி20 பந்துவீச்சு தரவரிசையில் ஒருகட்டத்தில் முதலிடத்தில் இருந்து ரவி பிஷ்னோய் (Ravi Bishnoi) தற்போது 11ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் டி20இல் நம்பர் 1 பௌலராக இருந்தபோதும் கூட டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணி இவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. இவருக்கு ஓடிஐயிலும் பெரிதாக வாய்ப்பில்லை என்பதால் இனி இவரை இந்திய அணியில் பார்ப்பது கூட அரிதாகலாம். நேற்று கூட ரவி பிஷ்னோய்க்கு பதில் வருண் சக்ரவர்த்திக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. ரவி பிஷ்னோயுக்கு இன்னும் வயது இருக்கிறது. 

24 வயதான அவர் லெக் ஸ்பின்னர் என்றாலும் பெரும்பாலும் கூக்ளியை நம்பியே இருப்பதாக அவர் மீது பொதுவாக விமர்சனம் வைக்கப்படுவது உண்டு. தற்போது வருண் தனது இடத்தை இந்த தொடரின் மூலம் உறுதி செய்துவிட்டால் பிஷ்னோய்க்கு வொயிட் பால் கிரிக்கெட்டில் வாய்ப்பும் அரிதாகிவிடும். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் கவனம் செலுத்தும்பட்சத்தில் இதுபோன்ற சிக்கலில் சிக்காமல் தப்பிக்கலாம்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.