ம.பி.யின் போபாலில் தொழிற்சாலையில் தயாரித்த ரூ.1,800 கோடி போதை பொருள் பறிமுதல்

போபால்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 2-ம் தேதி டெல்லியின் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5,600 கோடி ஆகும். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குஜராத்தின் சூரத் நகரில் பலநூறு கோடி மதிப்புள்ள போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சிலர்கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து போபாலின் பாக்ரோடா கிராமத்தில் உள்ள ஆலையில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், குஜராத் தீவிரவாத தடுப்புபிரிவு போலீஸார் மற்றும் மத்தியபிரதேச போலீஸார் இணைந்து கடந்த சனிக்கிழமை திடீர் சோதனைநடத்தினர்.

அந்த ஆலையில் 907 கிலோ மெபிடிரோன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.1,814 கோடிஆகும். இது தொடர்பாக அமித் பிரகாஷ் சந்திர சதுர்வேதி, சன்யால் பானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த அமித் பிரகாஷ் சந்திர சதுர்வேதி, போபால் புறநகர்ப் பகுதியில் உள்ள ஆலையை கடந்த6 மாதங்களுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்து உள்ளார். இந்தஆலையில் உயிர் காக்கும் மருந்துகளை தயாரிப்பதாக சுற்றுவட்டார பகுதிகளில் அவர் கூறியுள்ளார்.

மெபிடிரோன் போதை: ஆனால், தடை செய்யப்பட்ட மெபிடிரோன் என்ற போதை பொருளை சதுர்வேதி ரகசியமாக உற்பத்தி செய்துள்ளார். நாள்தோறும் 25 கிலோ அளவுக்கு மெபிடிரோன் போதை பொருள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த போதை பொருளை சன்யால் பானி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.

மெபிடிரோன் போதை பொருளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும். இதை தொடர்ந்து பயன்படுத்தும்போது நரம்பு மண்டல பாதிப்பு, பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். உலகம் முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் மெபிடிரோன் போதை பொருளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரின் முயற்சியால் போபாலில் ரூ.1,814 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பான, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க குஜராத் பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.