"காங்கிரசின் பிரிவினைவாத அரசியலை நிராகரித்த அரியானா மக்கள்.." – அமித் ஷா பெருமிதம்

புதுடெல்லி,

அரியானாவில் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லபட்டது. ஆனால், அங்கு தற்போது காட்சிகள் மாறியுள்ளன.

90 தொகுதிகள் கொண்ட அரியானா மாநிலத்தில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை. தற்போது அங்கு பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன. கிட்டத்தட்ட பா.ஜ.க. அரியானாவில் ஆட்சி அமைப்பது உறுதி என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த முறை பா.ஜ.க. அரியானாவில் ஆட்சி அமைத்தால் அது வரலாற்று சாதனையாக அமையும். இதன்படி தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாக்கு வங்கிக்காக நாட்டை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “அரியானாவில் பாஜகவின் மகத்தான வெற்றி, பிரதமர் தலைமையிலான பாஜக அரசின் மீது விவசாயிகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், வீரர்கள் மற்றும் இளைஞர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றி. சாதி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் காங்கிரசின் “எதிர்மறை மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை” ‘வீரபூமி’ யான அரியானா மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர். பாஜகவின் வளர்ச்சி மற்றும் ஏழைகளின் நலனுக்கான 10 ஆண்டு கால சாதனையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் பூமியான அரியானா, வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாக்கு வங்கிக்காக நாட்டை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டியுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மாநிலத்திற்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பளித்த அரியானா மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.