“பாஜகவுக்கு காஷ்மீர் மக்கள் கொடுத்த பதிலடியே தேர்தல் முடிவுகள்!” – ஜவாஹிருல்லா

சென்னை: “ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜகவின் மாநில அங்கீகாரத்திற்கு எதிராக மக்கள் கொடுத்த பதிலடி” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இந்திய இறையாண்மையின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்குப் பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயக ரீதியாக மக்கள் வழங்கி இருக்கும் தகுந்த பதிலடி. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் எதிர்பார்த்திருந்த முடிவை அம்மாநில மக்கள் உறுதி செய்து இருக்கிறார்கள். ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு இருக்க வேண்டும்.

இந்தியா கூட்டணிக் கட்சிகள் தங்கள் அரசியல் சுய லாபங்களுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் எழுச்சி புது நம்பிக்கையை வழங்கி இருக்கிறது. அதன் வாக்கு வங்கி அதிகரிப்பு இந்தியா கூட்டணியின் எதிர்காலத்திற்குப் புது உத்வேகத்தை வழங்கியிருக்கிறது. பிளவுவாத அரசியலைத் தவிர்த்து ஒற்றுமையுடன் முன்னேற இந்தத் தேர்தல் முடிவுகள் வழி வகுத்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.