தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடம்

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

86 வயதான ரத்தன் டாடா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா. இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியான வதந்தி குறித்து நான் அறிவேன். அது முற்றிலும் ஆதாரமற்றவை என அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். கவலைகொள்ள வேண்டாம். நான் சிறந்த மனநிலையுடன் உள்ளேன். எனது வயது காரணமாக மேற்கொள்ளப்பட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன்” என அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழும தலைவர் பதவியில் 21 ஆண்டு இருந்து, கடந்த 2012-ம் ஆண்டு ரத்தன் டாடா ஓய்வு பெற்றுவிட்டார். 1996-ல் டாடா டெலி சர்வீஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். அண்மையில் அப்ஸ்டாக்ஸ் பங்கு புரோக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தனது 5 சதவீத பங்குகளை விற்பனை செய்தார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றவர். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் பின்னர், டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.