“ஏழைகளின் ரட்சகர்” – ரத்தன் டாடா உடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த மும்பை செய்தித்தாள் முகவர்!

மும்பை: ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த செய்தித்தாள் விற்பனை செய்துவரும் ஹரிகேஷ் சிங் என்பவர் டாடா குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் வைரலாகி வருகின்றன.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த செய்தித்தாள் விற்பனை செய்துவரும் ஹரிகேஷ் சிங் என்பவர் டாடா குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் வைரலாகி வருகின்றன. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2001ஆம் ஆண்டு முதல் ரத்தன் டாடா என்னிடம் செய்தித்தாள் வாங்கி வந்தார். மொத்தம் 14 செய்தித்தாள்களை நான் அவரது வீட்டுக்கு தினமும் டெலிவரி செய்வேன்.

தனது பங்களாவின் முன்னால் இருக்கும் தோட்டத்தில் சிரித்த முகத்துடன் அமர்ந்திருக்கும் டாடாவை என்னால் மறக்கமுடியாது. நான் வந்துகொண்டிருக்கும்போதே என்னை பார்த்து கையசைப்பார். சிலநேரம் என்னைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் விசாரிப்பார். இவை என்னுடைய மனதில் ஆழமாக பதிந்துள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய உறவினர் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. பணவசதி இல்லாததால் அவரால் சரியான சிகிச்சையை மேற்கொள்ளமுடியவில்லை. இதுகுறித்த ரத்தன் டாடாவிடம் ஒருமுறை கூறினேன். உடனே தன்னுடைய டாடா மெமரியல் சென்டருக்கு தனது கைப்பட ஒரு கடிதத்தை எழுதி, கூடவே ரூ.5 லட்சத்தை என்னிடம் கொடுத்து அனுப்பினார். அவர் ஏழைகளின் ரட்சகராக இருந்தார். கரோனா தொற்று ரத்தன் டாடாவின் வாசிப்பு பழக்கத்தையும் மாற்றிவிட்டது என்று நினைக்கிறேன். அவரது வீட்டில் அதன்பிறகு செய்தித்தாள்கள் வாங்குவதை நிறுத்திவிட்டனர்” இவ்வாறு ஹரிகேஷ் சிங் தெரிவித்தார்.

ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு: டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார். 1962-ல் டாடா குழுமத்தில் இணைந்தார். 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது. 1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.

பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்கவேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது. உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். ‘டாடா நானோ’ கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவர். பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர். பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் இருந்தவர். பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் தற்போது டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தியவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.