அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்,

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் 7-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டன.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைதிக்கான நோபல் பரிசு, ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை அந்த அமைப்பு மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக தொடர்ந்து அந்த அமைப்பு பணியாற்றி வந்துள்ளது. அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை ஜப்பானிய அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வருகிற 14-ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. நோபல் பரிசு நிறுவனரான ஆல்பிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ந்தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.