ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு, நிவாரண பணிகள்: பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கியதாக அரசு தகவல்

சென்னை: ரயில் விபத்து நடத்த கவரைப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கியதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து பீஹார் மாநிலம் தர்பாங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் மோதியது. இதில், ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டன. ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சம்பவ இடத்துக்கு அமைச்சர் நாசர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர் சென்றுமீட்பு பணிகளை மேற்கொண்டனர். ரயிலில் சுமார் 1,600 பேர் பயணம் செய்ததாக தெரியவருகிறது. சரக்குரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன.

காயமடைந்த 19 பேர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், காயமடைந்த 4 பயணிகள் பொன்னேரிஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன்அவர்களுக்கு உரிய சிகிச்சைஅளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், விபத்து நடந்த இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுதங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளின் விவரம், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான மாற்றுஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர்உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்து அவற்றை உரிய முறையில் செய்துதர மாவட்ட நிர்வாகத்தை அறிவுறுத்தினார்.

28 ஆம்புலன்ஸ்: இந்த விபத்து நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 தீயணைப்பு வாகனங்கள், வடமண்டல இணை இயக்குநர் தலைமையில் 2 மாவட்ட அலுவலர்கள், 3 நிலைய அலுவலர்கள் மற்றும் 25 தீயணைப்பு வீரர்களுடன் துரிதமாக மீட்புப் பணிகள்நடைபெற்றன. இதனால் விபத்துஇடத்தில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு இதர பெட்டிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. 28 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 3 மருத்துவக் குழுவினர்மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தங்கள் பயணத்தை தொடர முடியாத பயணிகள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கவரப்பேட்டையில் கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டன. இதையடுத்து பொன்னேரியில் இருந்து சிறப்பு ரயில் மூலம்சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.

ரயில் விபத்தில் உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாமல், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் தேவையான உதவிகள் வழங்கியதற்காக தமிழ்நாடு அரசுக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.