கடற்படையின் வெள்ள அனர்த்த மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மேல் மாகாணத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன

பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹ மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிவாரணக் குழுக்கள் நேற்று (13 அக்டோபர் 2024) வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தன.

கடும் மழை காரணமாக களுகங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓய ஆகியன நிரம்பி வழிவதால் கடுவெல, பியகம, இஹலகம மற்றும் ஜா எல ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (ஒக்டோபர் 13) காலை 08 வெள்ள நிவாரணக் குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக அனுப்பப்பட்டன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, டிங்கி படகுகள் மூலம் பாதுகாப்பான போக்குவரத்து வசதி, சமைத்த உணவு மற்றும் உலர் உணவுகளை விநியோகித்தல், மின் பராமரிப்பு பணிகளுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்வது, மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர பாதுகாப்பான இடங்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளை நிவாரணக் குழுக்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையில் இருபத்தி இரண்டு (22) வெள்ள நிவாரணக் குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையில் ஒன்பது (09) மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையில் பதினேழு (17) வெள்ள நிவாரணக் குழுக்களும் உட்பட மொத்தம் 48 குழுக்கள், தேவைப்படும்போது உடனடியாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.