புயல் எச்சரிக்கையை மீறி மீனவர்கள் கடலுக்குச் சென்றால் நலத்திட்ட உதவிகள் ரத்து: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் மழை பொழிவில்லை. அதே நேரத்தில், மீனவர்கள் தடையை மீறி கடலுக்குச் சென்றால் நலத்திட்ட உதவிகள் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டது. இதையேற்று பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பி விட்டனர். 3-வது நாளாக இன்று யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் கரை திரும்பியுள்ளனர்.

இதனால் புதுவையில் அனைத்து படகுகளும் பாதுகாப்புடன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், காலை முதல் மழை பொழிவு ஏதும் இல்லை. வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஒரு சிலர் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றிருப்பதாக மீன்வளத் துறைக்கு புகார் வந்தது. அவர்களும் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப் பட்டுள்ளனர். தடையை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.