“என் கணவரின் கைகோர்த்து என்னைத் தகனம் செய்யுங்கள்'' – கணவர் இறந்த மறுநாளே தற்கொலை செய்த மனைவி!

டெல்லியில், இந்திய ராணுவப் படையில் வேலை பார்க்கும் பெண் அதிகாரியொருவர், விமானப் படையில் வேலைபார்க்கும் தனது கணவர் உயிரிழந்த செய்தியறிந்து தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, விமானப் படை லெப்டினன்ட் அதிகாரி தீன்தயாள் தீப் மற்றும் இவரின் மனைவியான ராணுவ அதிகாரி ரேணு தன்வார் ஆகியோர் 2022-ல் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

இதில், பீகாரைச் சேர்ந்த தீன்தயாள் தீப் ஆக்ராவிலுள்ள விமானப்படை நிலையத்தில் பணியமர்த்தப்பட்டதையடுத்து, டெல்லி கண்டோன்மென்ட்டில் விமானப் படை சிறப்புப் பிரிவு அதிகாரிகள் தங்கும் விருந்தினர் மாளிகையில் ரேணு தன்வார் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த திங்கள் இரவன்று தீன்தயாள் தீப் ஆக்ராவில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தியறிந்த அவரின் மனைவி, அடுத்தநாளே தான் வசித்து வந்த விருந்தினர் மாளிகையில் மின்விசிறியில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி உயிரிழப்பு

இதுபற்றி போலீஸாருக்குப் புதன்கிழமைத் தகவல் கிடைத்தது. பின்னர், டெல்லி விருந்தினர் மாளிகைக்கு விரைந்த போலீஸார், ரேணு தன்வாரின் உடலை மீட்டனர். கூடவே, அவரின் தற்கொலைக் குறிப்பு ஒன்றையும் கைப்பற்றினர். அதில், தனது கணவருடன் கைகோர்த்து தங்கள் இருவரையும் தகனம் செய்யவேண்டும் என்று ரேணு தன்வார் குறிப்பிட்டிருந்தார். மறுபக்கம், தீன்தயாள் தீப்பின் தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.