டெல்லியில் காற்று மாசு: சுவாசப் பிரச்சினைகளால் பொது மக்கள் அவதி

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் தற்போது காற்றின் தரம் 226 ஆக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் சுவாச பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

காற்றில் உள்ள மாசை அளவிட காற்று தரக் குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது. ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல் 300 அளவுக்கு சென்றால், காற்றில் மாசு அதிகம். 301 முதல் 400 வரை மிக அதிகம். 401 முதல் 500 ஏக்யூஐ என்பது மிகவும் மோசமான காற்று மாசு என்று அளவிடப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் தற்போது காற்றின் தரம் 226 ஆக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஐடிஓ பகுதியில் AQI 226, இந்தியா கேட் பகுதியில் AQI 251, டெல்லி எய்ம்ஸ் பகுதியில் AQI 253 என காற்றின் தரம் பதிவாகியுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த 13 மாசு கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தேசிய தலைநகரில் புகை மூட்டம் சூழ்ந்துள்ளனது, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

டெல்லியில் வசிக்கும் ஆஷிஷ் குமார் மீனா என்பவர் கூறுகையில், “கடந்த இரண்டு நாட்களாக அக்ஷர்தாம் பகுதியில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளது. இது குடியிருப்பாளர்களுக்கு பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது” என்றார். பின்னர் பேசிய மற்றொருவர், “கடந்த இரண்டு நாட்களில் இங்கு காற்றுமாசு அளவு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. தீபாவளிக்கு பிறகு, மாசு அளவு இன்னும் அதிகரிக்கும். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக சாடிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, “டெல்லியை மாசு இல்லாத டெல்லியாக மாற்றுவோம் என்று வாக்குறுதிகளை அளித்தார்கள். இன்று யமுனையின் நிலையைப் பாருங்கள். டெல்லி கேஸ் சேம்பராக (gas chamber) மாறிவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.