IPL 2025: இந்த 6 வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்திற்கு வருவார்கள் – பல கோடிகளை அள்ளுவார்கள்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் உள்ளது. வரும் அக். 31ஆம் தேதிக்குள் 10 அணிகளும் ஏலத்திற்கு முன்னர் தாங்கள் யார் யாரை தக்கவைக்கிறோம் என்ற பட்டியலை வெளியிட்டுவிடும். ஒரு அணி 6 வீரர்களை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என்பதாலும் புதிய விதிமுறைகளாலும் பல வெளிநாட்டு வீரர்களை விடுவிக்க வேண்டிய கட்டாயத்தில் பல அணிகள் இருக்கின்றன. 

எனவே, வீரர்களுக்கு சரியான தொகை கிடைக்கவும், அணியும் நஷ்டத்தை தவிர்க்கவும் வீரர்கள் ஏலத்திற்கு வருவதுதான் நல்லது என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். இந்நிலையில், இந்த 6 வெளிநாட்டு வீரர்களும் அவரவர் அணிகளில் இருந்து வெளியே வந்து, ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இவர்களை எடுக்க அந்த அணிகள் RTM கார்டுகளை பயன்படுத்தலாம் என்றாலும் அதிக தொகையை பெறவே இவர்கள் ஏலத்தில் பங்கேற்க இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பது குறித்து இதில் காணலாம்.   

6 முக்கிய வெளிநாட்டு வீரர்கள்

மிட்செல் ஸ்டார்க்: கடந்த 2024 மினி ஏலத்தில் 24.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) எடுத்தது. 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக குவாலிஃபயர் 1 மற்றும் இறுதிப்போட்டியில் ஸ்டார்க்கின் பந்துவீச்சுதான்  கொல்கத்தா அணிக்கு கோப்பையை உறுதி செய்தது. இவர் இந்த முறை கேகேஆர் அணியால் தக்கவைக்கப்பட மாட்டார் என தெரிகிறது. எனவே, இவர் அதிக தொகையை பெறுவதற்கு ஏலத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

பில் சால்ட்: கடந்த 2024 சீசனில் ஜேசன் ராய் விலகியதால் மாற்று வீரராக பில் சால்ட் (Phil Salt) அடிப்படை தொகையில் கேகேஆர் அணிக்கு வந்தார். சுனில் நரைன் உடனான இவரின் அதிரடி ஓப்பனிங் கேகேஆர் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, கோப்பையையும் வாங்கிக்கொடுத்தது. இவரும் கேகேஆர் அணியால் தக்கவைக்கப்பட மாட்டார் என தெரிகிறது. அந்த வகையில், பில் சால்ட் ஏலத்திற்கு வருவார் என கூறப்படுகிறது. 

கிளென் மேக்ஸ்வெல்: ஆர்சிபி கடந்த சீசனில் பிளே ஆப் வரை வந்தது. ஆனால் அதற்கு பிறகு சோபிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) போன்ற முக்கிய வீரர்கள் சரியாக விளையாடாதது. எனவே, மேக்ஸ்வெல்லை ஆர்சிபி தக்கவைக்காது. எனவே மேக்ஸ்வெல் ஏலத்திற்கு வர முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 

ஜாஸ் பட்லர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த மூன்று, நான்கு சீசன்களாகவே சிறப்பாக விளையாடி வந்தாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஜாஸ் பட்லர் (Jos Butler) ராஜஸ்தானில் முக்கிய வீரராக விளங்குகிறார். இருப்பினும் அவரை தக்கவைக்க ராஜஸ்தான் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. எனவே பட்லரும் ஏலத்திற்கு வர திட்டமிட்டிருக்கிறார் என தகவல்கள் கிடைக்கின்றன. 

டிம் டேவிட்: மும்பை இந்தியன்ஸ் அணி இவரை பெரும் நம்பிக்கை உடன் எடுத்தது. ஆனால் இவர் போதுமான அளவு தனது திறனை வெளிக்காட்டவில்லை. எனவே அவரை மும்பை தக்கவைக்க விரும்பாது. அந்த வகையில், டிம் டேவிட் (Tim David) ஏலத்திற்கு வர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. 

ககிசோ ரபாடா: பஞ்சாப் கிங்ஸ் அணிதான் இந்த முறை அதிக தொகையுடன் மெகா ஏலத்திற்குள் நுழையும் அணியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அந்த வகையில், அந்த அணியில் ரபாடா (Kagiso Rabada) நிச்சயம் தக்கவைக்கப்படமாட்டார். எனவே, ரபாடாவும் ஏலத்திற்கு வர திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.