லெபனானில் மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

பெய்ரூட்,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அரசு மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 57 பேர் படுகாயமடைந்ததாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீவிர காயங்களுடன் பலர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.