காட்பாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் 24 மணி நேரத்தில் ரூ.1.39 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்

வேலூர்: காட்பாடியில் உள்ள வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடியில் இன்று (அக்.23) அதிகாலை நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1.39 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கான சரக்கு வாகன போக்குவரத்து அதிகம் நடைபெறுகிறது. அதேபோல், திருப்பதி செல்லும் பெரும்பாலான வாகன போக்குவரத்தும் காட்பாடி வழியாகவே செல்கிறது. இதன் காரணமாக காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் வட்டார போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ) சார்பில் சோதனை சாவடி இயங்கி வருகிறது.

இங்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவர் தலைமையில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் முறையான அனுமதியுடன் தமிழகத்துக்கு வருகின்றனவா, சரக்கு வாகனங்களின் எடை, சுற்றுலா வாகனங்களில் அதிகப்படியான பயணிகள் வருகின்றனரா என்பது உள்ளிட்டவற்றை கண்காணிப்பதுடன் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து கட்டணம் வசூலிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த சோதனை சாவடியில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீஸார் இன்று (அக்.23) அதிகாலை 4 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தி தலைமையில் அலுவலக பணியாளர் கல்யாணசுந்தரம், உதவியாளர் பிரமிளா மற்றும் வெளிநபர்கள் 3 பேர் இருந்தனர். சோதனைச் சாவடி கணினி அறை மற்றும் அருகில் இருந்த இடங்களில் சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 900 தொகையை பறிமுதல் செய்தனர்.

மேலும், அலுவலக ஆவணங்களை சோதனை செய்ததில் நேற்று (அக்.22) தொடங்கி இன்று காலை வரை 24 மணி நேரத்துக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்திக்கு பணி என்ற நிலையில் பல்வேறு வகைகளில் வெளிமாநில வாகனங்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அபராதம் இல்லாமல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரூ.1.39 லட்சம் லஞ்சமாக 3 வெளிநபர்களை நியமித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அலுவலக அறையில் இருந்து ஆந்திராவில் இருந்து காட்பாடி வழியாக வேலூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் காய்கறி, பழங்கள் ஏற்றிய லாரிகளில் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட காய்கறி, பழக்கூடைகள் இருந்தன.

காட்பாடி வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1.39 லட்சம் பறிமுதல் தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.