கூகுள் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது ஏன்? – சுந்தர் பிச்சை விளக்கம்

மென்லோ பார்க்: கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு இலவசமாக வழங்குவதன் பின்னணியில் உள்ள காரணத்தை அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை விவரித்துள்ளார்.

டெக் உலகத்தின் சாம்ராட் என கூகுளை சொல்லலாம். ஸ்மார்ட்போன்களின் இயங்குதளம் தொடங்கி மின்னஞ்சல், தேடு பொறி, மேப்ஸ் என அதன் பயன்பாடு நீள்கிறது. தற்போது ஏஐ தொழில்நுட்பத்திலும் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், சுந்தர் பிச்சை பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் ஊழியர்களுக்கு கட்டணமின்றி உணவு வழங்குவது குறித்து விவரித்துள்ளார். இதனை ஊழியராக தனது அனுபவத்தில் இருந்து அவர் பகிர்ந்துள்ளார். “உணவகத்தில் சக ஊழியர்கள் பலரையும் நான் சந்தித்து பேசியுள்ளேன். அப்படி கலந்து பேசும் போது சுவாரஸ்யமான பல ஐடியாக்கள் கிடைக்கும். அது எங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் பங்களிக்கும்.

அங்கு பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கும். இது ஊழியர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துகிறது. அதோடு பணி சூழலுக்கும் உற்சாகம் தருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 1.82 லட்சம் ஊழியர்கள் உலக அளவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, வீட்டில் இருந்து பணிபுரியும் ஆப்ஷன், ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவற்றை கூகுள் வழங்குகிறது. ஊழியர்கள் நலன் சார்ந்த கொள்கைகளை முன்னெடுக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் அறியப்படுகிறது. புதிய சவால்களை ஏற்க விரும்புபவர்களுக்கு வேலைவாய்ப்பினை கூகுள் வழங்கி வருவதாக அண்மையில் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.