உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக் காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சந்திரசூட் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தார்.

அவரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 51-வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் நவம்பர் 11-ம் தேதி பதவியேற்க உள்ளார். 2025 மே 13-ம் தேதி வரை 6 மாதங்களுக்கு அவர் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் சந்திரசூட் பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான ஓய்வு வயது 65 ஆகும். சந்திரசூட்டுக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா உள்ளார்.

சஞ்சீவ் கண்ணா 1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். 1980-ம் ஆண்டு டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் சட்டம் பயின்றார். 2016-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தேர்தல் பத்திர நடைமுறையை ரத்து செய்த ஐந்து நீதிபதி அமர்வில் சஞ்சீவ் கண்ணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.