சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டு உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11-ம் தேதி சஞ்சீவ் கன்னா பதவியேற்கிறார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ஓய்.சந்திரசூட் வரும் நவ.,10ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு, அவருக்கு கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து,தனக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்து இருந்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர்,சந்திரசூட் ஓய்வு பெறும் மறுநாள்(நவ.,11) அன்று பதவியேற்க உள்ளார்.

1960ம் ஆண்டு மே 14ம் தேதி டெல்லியில் இவர் பிறந்தார். டெல்லி பல்கலையில் சட்டம் பயின்றார். இவரது தந்தை டெல்லி ஐகோர்ட்டின் நீதிபதியாக 1985ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவரது தாயார் சரோஜ் கண்ணா டெல்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் இந்தி பேராசிரியராக பணியாற்றினார்.

இவர் 1983ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார். டெல்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.