IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு – 3 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை… 3 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

Team India Squad For Australia Tour: இந்தியா – ஆஸ்திரேலியா (India vs Australia) அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோத உள்ள நிலையில், இந்த தொடர் உச்சக்கட்ட பரபரப்பில் நடைபெற இருக்கிறது. 

கடந்த நான்கு தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியிருப்பதால் இந்திய அணியிடம் இருந்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை (Border – Gavaskar Trophy) வென்று, உள்நாட்டில் மீண்டும் தனது மதிப்பை உயர்த்த ஆஸ்திரேலிய அணி துடிக்கும். கடந்த 2018-19, 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியே வெற்றி பெற்றிருந்தது. மறுமுனையில் இந்திய அணிக்கோ ஆஸ்திரேலிய அணியை (Team Australia), ஆஸ்திரேலியாவிலேயே வைத்து ஹாட்ரிக் கணக்கில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். 

முக்கிய டெஸ்ட் தொடர்

அதுமட்டுமின்றி, கடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் இந்திய அணி (Team India) ஆஸ்திரேலியாவிடம் தோற்றே கோப்பைகளை இழந்தது எனலாம். எனவே அவற்றை சரிகட்ட ஆஸ்திரேலியாவை படுதோல்வியடைய செய்ய வேண்டியது இந்திய அணிக்கு மிக தேவையான ஒன்று. மேலும், தற்போது அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கும் பார்டர் – கவாஸ்கர் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

Squads for India’s tour of South Africa & Border-Gavaskar Trophy announced #TeamIndia | #SAvIND | #AUSvIND pic.twitter.com/Z4eTXlH3u0

— BCCI (@BCCI) October 25, 2024

18 வீரர்கள் அடங்கிய இந்திய அணி 

இந்நிலையில், இத்தகைய நெருக்கடியும், பரபரப்பையும் கொண்ட தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய இந்திய அணி நேற்றிரவு (அக். 25) பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா (Rohit Sharma) கேப்டனாகவும், ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாகவும் தொடர்கின்றனர். ரோஹித் சர்மா முதல்கட்ட போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியான நிலையில், பிசிசிஐ அதுகுறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. எனவே, ரோஹித் முதல் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். 

3 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை

தற்போது நியூசிலாந்து அணியுடன் விளையாடி வரும் டெஸ்ட் அணியில் இருந்து குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) மற்றும் அக்சர் பட்டேல் (Axar Patel) ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக மேற்கூறிய இருவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவில் நிச்சயம் ஒருவருக்குதான் பேக்அப் கிடைக்கும் என்பதால் அஸ்வினை சில போட்டிகள் மட்டும் வாஷிங்டன் சுந்தருக்காக வெளியே அமரவைக்கும் வாய்ப்புள்ளது. 

அதேபோல் வேகப்பந்துவீச்சு பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி (Mohammed Shami) இந்திய அணி ஸ்குவாடில் சேர்க்கப்படவில்லை. அவர் இரண்டாவது பாதியிலாவது சேர்த்துக்கொள்ளப்படுவார் என கூறப்பட்டாலும் பிசிசிஐ தனியே அறிவித்துள்ள மூன்று மாற்று வீரர்களின் பட்டியலில் கூட முகமது ஷமி இடம்பெறவில்லை. எனவே அவர் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகிறது. முகமது ஷமி கடந்தாண்டு ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். அறுவை சிகிச்சைக்கு அதில் இருந்து அவர் முழுமையான உடற்தகுதி பெறாத நிலையில், தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகவில்லை என தெரிகிறது.

3 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

இது ஒருபுறம் இருக்க இந்திய அணி மூன்று புதுமுகங்களையும் 18 பேர் அடங்கிய முக்கிய ஸ்குவாடில் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பேக்அப்பாக ரஞ்சி கோப்பை தொடர் உள்பட உள்நாட்டு தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்காள அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு (Abhimanyu Easwaran) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் இதுவரை இந்திய அணிக்காக விளையாடியதில்லை. மேலும் இவரை சேர்த்துள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகவில்லை என்பதும் உறுதியாகிறது.

இடதுகை பாஸ்ட் பௌலரே இல்லை

அபிமன்யூ ஈஸ்வரன் மட்டுமின்றி நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy), ஹர்ஷித் ராணா (Harshit Rana) ஆகியோருக்கும் டெஸ்ட் ஸ்குவாடில் வாய்ப்பு கிடைத்துள்ளது. வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருந்தாலும் இவர்களுக்கு பேக்அப்பாக ஹர்ஷித் ராணா செயல்படுவார் எனலாம். அதேபோல், வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேவைப்படும்பட்சத்தில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம். வேகப்பந்துவீச்சில் இந்திய அணியிடம் 5-6 பேர் இருந்தாலும் யாருமே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 

பேட்டிங்கில் பெரிய மாற்றமில்லை

பேட்டிங் மிடில் ஆர்டரை பொறுத்தவரை சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபிராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரேல் ஆகியோர் உள்ளனர். இதில் துருவ் ஜூரேல் விக்கெட் கீப்பிங் கேப்அப் ஆகும். அதேபோல், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சுப்மான் கில், ராகுல், சர்ஃபிராஸ் கான் ஆகிய மூவரில் இருவருக்குதான் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி. ஆல்-ரவுண்டர்களாக ஜடேஜா, அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் உடன் நிதிஷ் குமார் ரெட்டியும் இருப்பார். எனவே, தேவைக்கு ஏற்ப காம்பினேஷன்களை அமைக்க இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பும் உள்ளது. முகேஷ் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி ஆகிய மூவரை மாற்று வீரர்களாக (Travelling Reserves) பிசிசிஐ அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.