புதுடெல்லி: “இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிஹாருக்கு பல அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், ஆந்திரா கொடூரமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கேற்ப அங்கு புதிய விமான நிலையம், பாட்னா ஐஐடி விரிவாக்கம், தொழிற்சாலைகள், வேளாண் திட்டங்கள் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக கூட்டணி ஆட்சியில், பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் பங்கு முக்கியமானது. இதனால் பிஹாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆந்திராவுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர். இது பிஹாருக்கான பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், “பிஹாருக்கு இந்த ஆண்டு தேர்தல் வருவதால் பல அறிவிப்புகள் வந்துள்ளன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்றொரு தூணாக இருக்கும் ஆந்திரா ஏன் இவ்வளவு கொடூரமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது?” எனப் பதிவிட்டுள்ளார்.