IPL 2025, Chennai Super Kings Foreign Players: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வொயிட் பால் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்.19ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் மார்ச் 21ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும். அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால் ரசிகர்களும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.
ஐபிஎல் 2025: அடங்க மறுக்கும் ஆர்சிபி ரசிகர்கள்
அதிலும் குறிப்பாக ஐபிஎல் ரசிகர்கள், எப்போது மார்ச் 21ஆம் தேதி வரும் என்றளவிற்கு எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். மும்பை, சென்னை, ஆர்சிபி போன்ற முன்னணி அணிகளின் ரசிகர்களைதான் இப்போது இருந்த கையில் பிடிக்க முடியவில்லை எனலாம். விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வந்தாலும் ஐபிஎல் என்றால் அவர் விஸ்வரூபம் எடுத்துவிடுவார். அதுவும் இந்த முறை கோலி மீண்டும் கேப்டன்ஸியை பெறுகிறார் எனவும் தகவல்கள் கசிவதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட காத்திருப்பில் உள்ளனர்.
ஐபிஎல் 2025: மும்பை அணி மீதான எதிர்பார்ப்பு
மும்பை அணியை பொறுத்தவரை யார் கேப்டன்சியை பெறுவார்கள் என்பது தற்போது வரை தெளிவாகவில்லை. ரோஹித் சர்மாவை கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய பின்னர், ஹர்திக் பாண்டியாவே அணியை வழிநடத்தினார். ஆனால், இந்தாண்டு இந்திய டி20 அணியின் கேப்டன்ஸியில் சூர்யகுமார் யாதவே உள்ளார். எனவே மும்பை அணிக்கும் அவரே கேப்டன்ஸியை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகமும் நீடிக்கிறது.
ஐபிஎல் 2025: சிஎஸ்கே மீதான எதிர்பார்ப்பு
மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மீண்டும் தோனி ஒரு சீசனில் விளையாட உள்ளது உறுதியாகியிருக்கிறது. இதனால் சேப்பாக்கம் மட்டுமின்றி நாடு முழுவதும் அவர் விளையாடுவதை காண மக்கள் கூட்டம் கூட்டமாக மைதானத்தை நோக்கி படையெடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவே ஐபிஎல் 2025 தொடரின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
அஸ்வினும் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஐபிஎல் சிஎஸ்கே அணியில் இணையுள்ளதால் அவரை மஞ்சள் ஜெர்ஸியில் விளையாடுவதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். தோனி – ஜடேஜா – அஸ்வின் என பழைய இந்திய, சிஎஸ்கே வீரர்கள் மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு ஆவலை அதிகரிக்க வைத்துள்ளது. அந்த வகையில், சிஎஸ்கே மீண்டும் கோப்பையை கைப்பற்றினால் கூடுதல் போனஸாக இருக்கும் என்பதையும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவில் வெளிநாட்டு வீரர்கள் யார் யார்?
கான்வே, பதிரானா போன்ற முக்கிய வெளிநாட்டு வீரர்கள் மோசமான பார்மில் இருப்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, பிராவோ இடத்தில் நல்ல வெளிநாட்டு வீரரின் தேவையும் சிஎஸ்கேவுக்கு இருக்கிறது. சாம் கரன் டி20இல் பெரிதாக சோபிப்பதும் இல்லை. இங்கிலாந்து டி20 அணியிலும் அவர் தற்போது இல்லை. அப்படியிருக்க அந்த இடத்தில் ஜேமி ஓவர்டனை சிஎஸ்கே மலைப்போல் நம்பி இருக்கிறது எனலாம்.
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவில் ஜேமி ஓவர்டன் விளையாடுவாரா?
ஆனால், இந்திய அணிக்கு எதிரான கடந்த மூன்று போட்டிகளில் அவர் தொடர்ந்து சொதப்பி வருவது சிஎஸ்கே ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் பேட்டிங்கில் பெரிய அளவில் அழுத்தமான ஆட்டத்தை பதிவு செய்யவில்லை.
நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி ஓவர்டனின் கைகளில்தான் இருந்தது. ஆனால், அதை அவர் தவறவிட்டார். எனவே, ஓவர்டன் சிஎஸ்கேவில் விளையாடும் வாய்ப்பும் குறைவு என்ற கூறப்படுகிறது. கான்வே, ரச்சின், பதிரானா, நூர் அகமது ஆகியோர்தான் முதன்மையான பிளேயிங் லெவனில் இருப்பார்கள். சாம் கரன் அல்லது ஜேமி ஓவர்டன் என்பது போக போக தான் உறுதியாகும்.