புதுடெல்லி: 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், பிஹாருக்கு அதிகப்படியான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.
பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் அம்மாநிலத்துக்கு மட்டுமே ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதே வேளையில், மத்திய பாஜக கூட்டணி ஆட்சியில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் பங்கு அளப்பரியது. அவரை திருப்திப்படுத்தவும், ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும், பிஹாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. பிஹாருக்கு மத்திய அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக, பட்ஜெட்டில் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அறிவிப்புகளில் சில…
> பிஹாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் – NIFTEM) அமைக்கப்படும். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
> பிஹாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்.
> ஐஐடி பாட்னாவில் உள்கட்டமைப்பு மற்றும் விடுதி வசதிகளை விரிவுபடுத்துவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
> மாநிலத்தின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிஹாரில் பசுமை வழி விமான நிலையங்கள் அமைக்கப்படும் மற்றும் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
> மேற்கு கோசி கால்வாய் திட்டத்துக்கு நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் 50,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள், அவர்களுக்கு பாசன நீர் கிடைக்கும். | வாசிக்க > மத்திய பட்ஜெட் 2025 – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?