கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் குற்றச்சாட்டு

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளாவை முன்னிட்டு கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கடந்த மாதம் 29ஆம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது , திடீரென நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப் பிரதேசம் மாநில அரசு தெரிவித்தது. மேலும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை உத்தரப் பிரதேசம் மாநில அரசு மறைத்து வருவதாக ஏற்கனவே அகிலேஷ் யாதவ் குற்றம் காட்டி இருந்தார். இந்த நிலையில், இது குறித்து மாநிலங்களவை எம்.பி ஜெயா பச்சன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயா பச்சன் கூறுகையில், ‘கும்பமேளா நடைபெறும் இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பல உடல்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது என்றும், இதனால் தண்ணீர் மாசுபட்டு உள்ளது . அதிக மாசுபட்ட தண்ணீர் கும்பமேளாவில்தான் உள்ளது. இது குறித்து யாரும் எந்த விளக்கமும் தரவில்லை.கும்பமேளாவுக்கு வரும் சாதாரண மக்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை. கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடினார் என பொய் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் எப்படி சிறிய இடத்தில் கூட முடியும்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.