புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை காலை முதல் மாலை வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை 5-ம் தேதி தேர்தல்நடைபெறுகிறது. மேலும், உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் மற்றும் தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்துவது, செய்திகள் வெளியிடுவது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணை யம் நேற்று வெளியிட்ட உத்தரவில், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் – 1951, பிரிவு 126 (ஏ) 1-ல்வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி 5-ம் தேதி புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி என எந்த ஊடகத்திலும் கருத்துக் கணிப்பு வெளியிட கூடாது. டெல்லி மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளில் பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.