டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 சதவீத வரி

பீஜிங்:

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பொருளாதார கொள்கைகள், வெளிநாடுகள் மீதான வரி விதிப்பு ஆகியவை சர்வதேச வர்த்தக போரை தூண்டும் வகையில் அமைந்துள்ளன. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடுகளான கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவால் உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. வரி விதிப்பை எதிர்கொண்ட நாடுகள், டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றத் தொடங்கின.

டிரம்பின் வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, மெக்சிகோ மற்றும் கனடா மீதான வரி விதிப்பை மட்டும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார் டிரம்ப். அதாவது, புலம்பெயர்ந்தோர் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்க இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து, அமெரிக்கா சற்று பின்வாங்கியிருக்கிறது.

ஆனால், சீனா மீதான வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போதுள்ள வரிகளுக்கு மேல் கூடுதலாக 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு 15 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது. எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10 சதவீத வரியை விதித்துள்ளது.

சீனாவின் சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விதிமுறைகளை மீறிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே மீண்டும் ஒரு வர்த்தக போர் ஏற்படலாம் என கருதப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.