மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீராங்கனை நியமனம்

புதுடெல்லி,

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்நிலையில் எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை பெத் மூனி செயல்பட்டு வந்தார்.

இவர் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகள் என வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே தற்சமயம் பெத் மூனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆஷ்லே கார்ட்னருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.